Wednesday, December 30, 2009

அரசியல்வாதிகள், புத்தாண்டு ஜோஸியம் சொல்றாங்க!

வரப்போற 2010ஆம் ஆண்டில், தங்கள் அரசியல் எப்படி இருக்குமென தமிழ்நாட்டின் முன்னணிக் கட்சித்தலைவர்களிடம் கேட்டபோது...
(பதில்களிலிருந்தே சொன்னவர் யாரென்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!)


அடுத்த ஆண்டிலிருந்து, எந்தக் கட்சி கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட முன்வருகிறதோ, அந்தக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போமென தெளிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
------------------------

வரும் ஆண்டு, செம்மொழித் தமிழ் ஆண்டு! கனிமொழிக்காக புதிய வரலாறு எழுதவுள்ள செம்மொழி மாநாட்டு ஆண்டு! அடுத்து எங்களுடய இலக்கு, அனைவரும் மின்சாரம் இல்லாத நேரத்திலும் கவலையில்லாமல் பொழுதுபோக்க, இலவச தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டுக்கட்டு, கோலிக்குண்டுகளை வழங்குவதே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
------------------------

இலவசங்களை அள்ளிக் கொடுத்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் வரும் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திப்பது உறுதி! அதுவே அவர்களின் குடும்ப அரசியலுக்கு இறுதியாக அமையுமென்பதும் உறுதி! நான் ஓய்வெடுக்கவில்லை, ஒதுங்கியிருக்கவும் இல்லை... பதுங்கியிருக்கிறேன் என்பதை விரைவில் புரிய வைப்பேன் என சபதமெடுக்கிறேன்!
------------------------

மாமா நேருவின் கனவை, அவரது மகள், அன்னை இந்திரா காந்தியின் கொள்கையை, அவரது மகன் ராஜீவ் காந்தியின் லட்சியத்தை, அவர் மனைவி, அன்னை சோனியாகாந்தியின் ஆசியுடன், அவரது மகன் ராகுல்காந்தி வழி நடத்த, தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்து கோஷ்டிகளும் இணைந்து, அடுத்த ஆண்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளதை அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மேலிடப் பார்வையாளர் உங்களுக்கு இப்போது விளக்குவார்!
------------------------

இனி அடுத்த ஆண்டிலிருந்து இடைத்தேர்தல் என்பதே கூடாது என்ற முடிவினை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்! அப்படி இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் வாக்குச்சீட்டினைப் பயன்படுத்த வேண்டும். எங்களைப் போன்ற வளரும் கட்சிகளை திமுக, அதிமுக போன்ற வளர்ந்த கட்சிகள், கூட்டணிக்குள் சேர்க்காமல் தோற்கடிக்கச் சதி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும்! எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் அடுத்த ஆண்டில் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!
------------------------

அடுத்த ஆண்டு கட்சி நடத்துறதா வேண்டாமான்னு கட்சி நடத்த நிதியுதவி செய்யுற என்னோட மனைவியை ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்! அவங்க என்னோட அரசி மட்டுமில்லை, என்னோட செல்லமும்!
------------------------

வரப்போற ஆண்டு 2010! ஆட்சிக்கு வரப்போகுது ஆபத்து! இந்த டிஆர் வரப்போறான் இன்னொரு சுத்து!
நயந்தாரா குடுக்குறா பூங்கொத்து! ஆண்டவா! எம்பையனக் காப்பாத்து!
------------------------

No comments:

Post a Comment