கிரிக்கெட் பிரியர்கள் அனைவராலும் ரசிக்கத்தக்க நடுவர்களில் முதன்மையான இடத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் இருக்கிறார். அவர் பவுண்டரி, சிக்ஸர்களுக்கு கையை ஆட்டும்விதமே அலாதியானது! அதுபோல ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸை இசைக்கும்போது ட்ரம்ஸ் ஸ்டிக்கை தூக்கிப்போட்டுப் பிடிப்பது கலக்கலாக இருக்கும்! இவர்களை நினைவுபடுத்தும் ஒரு நபர்தான் திருவான்மியூர் பகுதியில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவரும் சிவராமன் அவர்கள்.
இவரைப் பற்றிச் சொல்லுமுன் போக்குவரத்துக் காவலர்களைப் பற்றி ஒருசில விசயங்களைப் பகிர்ந்து கொள்வோம். போக்குவரத்துக் காவலர்கள் என்றாலே சாலை விதி மீறுவோரை ஓரங்கட்டிக் "கவனித்து" அனுப்புபவர்களாகத்தான் நம் அனுபவத்தில் காண முடியும். இவர்களுடைய பணியின் கடினத்தன்மையை நம்மால் உணர முடிவதில்லை.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நிகழும் திடீர் போக்குவரத்து மாற்றங்களால் ஏற்படும் சாலை நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலான காரியம். சாலை நடுவே நின்றபடியே நாள் முழுவதும் வேலை செய்யும் இவர்களுக்கு "நெருக்கடி" வந்தால் ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியும் இருப்பதில்லை. நிற்பதற்கான கூண்டும் பல சந்திப்புகளில் நிறுவப்படவில்லை.
அதுபோகட்டும். இனி சிவராமன் அவர்களைப் பற்றி...
திருவான்மியூர் பகுதியில் சாலையில் பயணிக்கும் பலரும் சிவராமனைக் கவனிக்கத் தவறுவதில்லை. பாட்சா படத்தில் வரும் "நீ நடந்தால் நடையழகு" என்ற பாடலின் இடையே நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்துக் காவலர் போல வந்து சில நொடிகள் விதவிதமாக கைகளை ஆட்டி ரசிக்க வைப்பார். ஆனால் இந்த சிவராமனோ நாள் முழுதும் அதுபோல விதவிதமாக, வேகவேகமாக கைகளை ஆட்டி, போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் நேர்த்தி மிகமிக அழகு! இவரது சுறுசுறுப்பால் நெருக்கடியான போக்குவரத்தும் முடுக்கிவிடப்பட்டு ஒழுங்கான திசையில் வேகமெடுக்கும்! தனது பணியில் ஈடுபாட்டோடும், மாறுபட்டும் செயல்படும் இவரால் அவரது துறைசார்ந்த அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!
கொசுறாக ஒரு நகைச்சுவை:
" அந்த டிராபிக் போலீஸ் ரொம்ப பயந்த சுபாவம்"
"எப்படி சொல்ற?"
"சைரன் அடிச்சுகிட்டு ஆம்புலன்ஸ் கிராஸ் பண்ணினாக்கூட வெறப்பா நின்னு சல்யூட் அடிச்சு வழிவிடுவாரு!"
No comments:
Post a Comment