Monday, December 28, 2009

குறும்படம் எடுக்கப் போறோம்!

தொழில்முறை இயக்குனர்கள் என்றில்லாமல், கையில் கேமரா அல்லது கதையுடன் திரியும் அனைவராலும் ஓரளவு வெற்றிகரமாக எடுக்க சாத்தியப்படும் ஒரு ஊடகமாக குறும்படங்களை இப்போது காண முடிகிறது. ஆனால் பெரும்பாலும் தற்போதைய வாரப் பத்திரிக்கைகளின் "ஒரு நிமிடக்கதை" போல பல குறும்படங்கள், அந்த நேரத்தில் "அட" போட வைத்துவிட்டு மறு நிமிடமே நமது நினைவை விட்டு நீங்கி விடுகின்றன.

நான் மிகவும் ஒன்றிப் பார்த்த முதல் குறும்படம் "கர்ணமோட்சம்". ஆர்குட் நண்பர்களின் கலந்துரையாடல் நிகழ்வின்போது திரையிடப்பட்டு காண நேர்ந்தது. நாட்டுப்புறக் கூத்துக் கலையின் அழிவு குறித்து மிகவும் நேர்த்தியாக மனதில் வலி ஏற்படுத்தும் விதமாக அதன் காட்சிகள் அமைந்திருக்கும். அடுத்ததாக "திற" என்ற குறும்படம், கரசேவகர்(!)களின் மதவெறியை வெட்டவெளிச்சமாக்கி இருந்தது. இந்நேரத்தில், ஆர்குட்டில் நான் பார்த்து ரசித்த "மறைபொருள்" குறும்படம் பற்றியும் சொல்லியாக வேண்டும். இஸ்லாமிய சமூகத்தில் "பர்தா" அணியும் பழக்கவழக்கத்தை சாடுவதாக இக்குறும்படம் அமைந்திருக்கும். அதை மவுனமாகச் சொல்லிய விதம்தான் அருமை.

சென்ற வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரியார் திடலில் நடைபெற்ற குறும்படப்போட்டியில் பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. திடீரென வந்த அழைப்பால், சற்று தாமதமாக அங்கு செல்ல நேர்ந்தது. இருப்பினும், என்னைச் சிந்திக்க வைத்த, அதிர்வடைய வைத்த இரண்டு குறும்படங்களைப் பார்க்க நேர்ந்தது.

"ப்ளைன் சீதா"(Plain sita) என்ற குறும்படம், மேல்த்தட்டு குடும்பத்தில், "பணக்கார பெற்றோர், பொறுப்பற்ற பிள்ளை," இவர்களுக்கிடையே நடக்கும் வாழ்க்கை தடுமாற்றங்களை போட்டு உடைப்பதாக இருக்கிறது. அப்பாவையும், பின்பு கணவனையும் சார்ந்து வாழாமல், தன் சுய உழைப்பில் வாழப் பழக வேண்டியதை தற்கால நடைமுறை, நகர்ப்புற வாழ்வியல் முறைகளை வைத்து விவரித்திருக்கிறார்கள். படம் முற்றுப் பெற்றதைப் போல இருந்தாலும் முற்றுப்பெறாத கேள்விகள் நம்மைத் தொடர்கின்றன! இதைப் போலவே அரவாணிகளின் வாழ்க்கை அவலத்தைப் போட்டுடைக்கும் "மிஸ்ஸிங் கலர்ஸ்"(Missing colors) மலையாளக் குறும்படமும் நம்முள் கேள்வியை விதைக்கின்றது. வயதான அரவாணியாக வாழ்ந்திருப்பவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நடிப்புத் திறமை இருக்கிறது. வாலிப வயதுள்ள அரவாணிகளிடம் தனது இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் எச்சில் சமூகத்தில், மூப்படைந்த பின்பு அவர்களால் எப்படி வாழ்க்கையை நகர்த்த முடிகிறது? என்ற கேள்வியே என்னுள் எழுந்த முதல் கேள்வி.

எனது நண்பன் குறும்படம் எடுக்கும் ஆர்வத்தில் கேமரா மற்றும் கதைக்கருவுடன் என்னைக் கலந்தாலோசித்து வருகிறான். நாங்கள் குறும்படம் எடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக இப்படங்களின் பாதிப்பு எங்களை பலப்படுத்த, அறிவை வளப்படுத்த உதவும்...

4 comments:

  1. mmmm. It's nice to see your blogspot Gautham. Spread your limitless knowledge. I am here to read.

    ReplyDelete
  2. Sure... It's my another Portion!

    I already have a blog for my poems. http://watrapgauthaman.blogspot.com

    ReplyDelete