Saturday, July 17, 2010

இயல்பாய் நடந்த திருமணம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, எனது அலுவலகத் தோழனின் திருமணத்தில் கலந்துகொண்டது முதலே அதுகுறித்து ஒரு பதிவு போட வேண்டுமென மனது தூண்டிக்கொண்டே இருந்தது! (அதுக்கு வேற வேலை என்ன!). இன்றுதான் அதற்கான நேரம் வாய்த்தது.

அப்படியென்ன விஷேசம் அந்தத் திருமணத்தில் எனக் கேட்கத் தோன்றும். ஒரு விஷேசமும் இல்லையென்பதே அதில் விஷேசம்! ஆம். வாசலில் மணமக்களின் பெயர் இருந்தது, ஆனால், அதில் மணமகனின் பெயர் முதலாவதாக இல்லை! வரவேற்க வரவேற்பாளர்கள் இருந்தார்கள், ஆனால், மேளதாளங்கள் இல்லை! அருந்த குளிர்பானங்கள் கொடுத்தார்கள், ஆனால், அதில் கோக், பெப்சி இல்லை! மேடையில் புகைப்படக்காரர்கள் இருந்தார்கள், ஆனால், புரோகிதரோ, ஓமகுண்டப் புகையோ இல்லை! மணமக்கள் புத்தாடையில் வீற்றிருந்தார்கள், ஆனால், அதில் பகட்டோ, மினுமினுப்போ துளியும் இல்லை! மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள், ஆனால், தாலி கட்டவில்லை! அன்பளிப்பு வாங்கினார்கள், ஆனால், அதில் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் இல்லை!

அப்புறம், சொல்லிக்கிறமாதிரி அதில் என்னதான் இருந்தது? காதல் இருந்தது, பெற்றோரின் சம்மதமும் கலந்திருந்தது. அதற்குச் சாட்சியாக மணமக்களைப் பெற்றவர்களும் மணமக்களோடு மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஜாதி கடந்து, மதம் கடந்து, பெரியாரின் சுயமரியாதைப் பாதையிலே அத்திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப்பேசிய மணமகனின் தாத்தா வாரியாரை நினைவுபடுத்தும் விதமாக நெற்றி நிறைந்த திருநீற்றுடன் இருந்தார். தனது பேரனின் திருமணத்தைப் பார்த்து, பரவசத்துடன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேரனுக்கு அளித்த அன்பளிப்பு, காந்தியின் சுயசரிதைப் புத்தகம்!



பெரியவர்கள் வாழ்த்துரையுடன், மனமக்களின் உறுதிமொழியுடன், சமுதாயப் பெரியவர் தாலி எடுத்துக் கொடுத்து நிறைவுபெறும் தற்கால அரைகுறைச் சீர்திருத்தத் திருமணங்களைப் போலல்லாமல் முழுமையான சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றது. ஆம், இத்திருமண விழாவில் மணமக்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நிகழ்விலும், மணமகளுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

அரைகுறை சீர்திருத்தத் திருமணங்களில் புரோகிதர், ஓமகுண்டச் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இத்திருமணத்தில் வரதட்சணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேளதாளங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, தாலி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முதல்வர்போல மணமக்களுக்கு வழங்கப்படும் படாடோபங்கள், வெட்டிச் செலவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. வந்திருந்த அனைவருக்கும் மணமக்கள் வீட்டாரால் வழங்கப்பட்ட அறுசுவை விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தாம்பூலப் பைக்குப் பதிலாக சுயமரியாதைத் திருமணங்கள் ஏன் வேண்டுமென்ற, தந்தை பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய சிறு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருமணத்தில் கலந்துகொண்ட பலரும், இத்திருமண விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருவதாக தவறாமல் குறிப்பிட்டார்கள். பின்பு ஏற்புரை நிகழ்த்திய மணமகன், இவ்விழா இயல்பாக நிகழும் திருமண விழா தான் என்றும், இது வித்தியாசமாகப்படுவது நம் சமூகத்தின் அவல நிலை என்றும் சுட்டிக்காட்டியது சிந்திக்கத்தக்கதாக இருந்தது. ஜாதி, மதங்களும், அவற்றின் சடங்கு சம்பிரதாயங்களும் பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டவை என்பதையும் குறிப்பிட்டார். ஆண், பெண் வாழ்க்கைத்துணையாக இணையும் இயல்பான நிகழ்விற்கு, நாம் பண்ணுகின்ற பகட்டு, பந்தா, சடங்கு சம்பிரதாயமென்ற அழிச்சாட்டியங்களை உணர வைத்தது அவரது பேச்சின் சாரம். உண்மைதானே?

Monday, July 5, 2010

பத்திரிக்கைச் சுதந்திரம்னா என்னங்க?

கோவை செம்மொழி மாநாட்டிலே சாலமன் பாப்பையா தலைமையிலே பட்டிமன்றம் ஒன்று நடந்தது. அதிலே பத்திரிக்கைத்துறை சார்பாக நக்கீரன் கோபால் பேசினார். அவரைப் பார்த்தமாத்திரத்தில், பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் தனது பத்திரிக்கையின் விற்பனைக்காக பிரபாகரனின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கீழ்த்தரமான மோசடிச்செயல்தான் நினைவுக்கு வந்தது.


தன் மரணச் செய்தியையே, தொலைக்காட்சியில் கண்டு பிரபாகரன் நகைப்பது போன்ற கிராபிக்ஸ் படத்தை வெளியிட்டு, அதன்மூலம் தனது பத்திரிக்கையின் விற்பனையை அதிரடியாக அதிகரித்துக்கொண்டார். பத்திரிக்கை வெளியான சிலமணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தீவிர ஆதரவாளர்கள்கூட நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான படத்தை உண்மையென்று கருத்து வெளியிடவில்லை. அந்தப் படம் எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்ற தகவலும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.


பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் இதுபோல பல்வேறு பத்திரிக்கைகளும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் தைரியமாக செயல்பட்டு வருகின்றன. இலவச இணைப்பு என்ற பெயரில் முன்னணிச் செய்தித்தாள்கள் பத்திரிக்கை இணைப்புகளை வழங்குவது வழக்கத்தில் உள்ளது. பெயரல்ளவில்தான் இலவச இணைப்பு. ஆனால் அந்த இணைப்பு வரும் நாட்களில் மட்டும் செய்தித்தாளின் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்கூடு. இதுகுறித்து எனது கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கேள்வி எழுப்பினேன். இந்த நடைமுறை, சட்டத்திற்குப் புறம்பானதுதான் என்று அப்போது பதிலளித்தார்கள்.


பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவதில் இருக்கும் ஒளிவுமறைவுகளைப் பார்க்கும்போதுதான் பத்திரிக்கை அதிபர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்குமான வித்தியாசத்தை உணர முடியும். தனக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடுடைய கட்சிகளின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, மற்ற கட்சிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, திரித்துக் கூறுவது என பல்வேறுவிதமான குறுக்குப் புத்திகளை கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளுமே செயல்படுத்தி வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இணையதள செய்திப் பத்திரிக்கையான தட்ஸ்தமிழ்.காமைச் சொல்லலாம். ஜெயலலிதா குறித்த செய்திகளை வெளியிடும்போது "கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்" என்றுதான் நக்கலுடன் ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுவார்கள். மற்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த முறையை கடைபிடிப்பதில்லை.




பத்திரிக்கைச் சுதந்திரத்தின் அடுத்த மோசடியாக விளம்பரங்களை வெளியிடுவதில் வரம்பு மீறுவதைச் சொல்லலாம். தங்களது பத்திரிக்கையில் மது, புகைபிடித்தல் தொடர்பான பொருட்களின் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என மார்தட்டிக் கொள்ளும் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் தற்போது விளம்பரங்களுக்கிடையேதான் அங்கங்கே ஒன்றிரண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இவ்வார ஆனந்தவிகடன் பத்திரிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டால், முதல் ஏழு பக்கங்களில் முழுக்க முழுக்க விளம்பரங்களே இடம்பிடித்திருக்கின்றன! விளம்பரங்கள் வெளியிடும்விதத்தில் முன்னணிப் பத்திரிக்கைகள் செய்துவரும் இன்னொருவகை மோசடி சற்று சுவாரஸ்யமானது. பல்வலிக்கான காரணங்களை விளக்கி கட்டுரை ஒன்றை வெளியிட்டு, கட்டுரை முடிவில் "இத்தகைய பல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் எங்கள் மருத்துவமனையில் சிறந்த முறையில் குணப்படுத்துவோமென மருத்துவர் தெரிவிக்கிறார்" எனக்கூறி விளம்பரம் செய்திருப்பார்கள்!
விளம்பர ஆதரவில்லாமல், முழுக்கமுழுக்கச் செய்திகளை மட்டுமே வெளியிடும் பத்திரிக்கைகளில் தனிச்சுற்றுச் சிற்றிதழ்கள் தவிர, "புதிய ஜனநாயகம்", "புதிய கலாச்சாரம்" பத்திரிக்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


பத்திரிக்கைச் சுதந்திரத்தின் மற்றொரு மோசடியாக, சாமியார்களைக் கொண்டு எழுதப்பட்டுவரும் ஆன்மீகத் தொடர், மற்றும் போலி மருத்துவர்களைக் கொண்டு எழுதப்படும் மருத்துவத் தொடர்களைக் குறிப்பிடலாம். நேற்றுவரை நித்தியானத்தாவிற்காக கதவைத் திறந்து வைத்த குமுதம் பத்திரிக்கை, சிக்கலில் அவர் சிக்கியதுமே தலைகீழாக மாறி, அவருக்கு அரைகுறை எதிர்ப்பு தெரிவித்து, சிஷ்யப்பிள்ளையான சாருநிவேதிதாவை வைத்தே தொடர் எழுத வைத்து காசு பார்க்கும் உத்தியை மாற்றியமைத்துக்கொண்டது, கேவலமான மோசடியாகும். குமுதத்திற்கும் நித்தியானந்தாவிற்குமான உறவை விசாரித்தாலே பல உண்மைகளை அம்பலப்படுத்தலாம்!

ஆளுங்கட்சியினரால் பத்திரிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது பத்திரிக்கையாளர் மன்றம் நேரடியாக வீதிக்கே வந்து போராடியதை பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் முன்னணிப் பத்திரிக்கைகளை யார் கட்டுப்படுத்துவது? கட்டுப்படுத்தும் பொறுப்பு பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இல்லையா? பத்திரிக்கையாளர்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லையா? பத்திரிக்கைகள் நாட்டின் ஒன்றாவது தூண், ரெண்டாவது தூண் என்று என்னத்தையாவது கப்ஸா விட்டுப் பீற்றிக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? அல்லது அதுதான் பத்திரிக்கை சுதந்திரமா?!

தீவிரவாத மலர்! - நாட்டு நடப்பு!

இன்றைய (மே 24, 2010) தினமலர், வாசகர் கடிதப் பகுதியில், கட்டம் கட்டிக் காட்டமாக எழுதப்பட்டிருந்த செய்தியில், தங்களது அடிப்படை உரிமைகளுக்காகச் சீன அரசை எதிர்த்துப் போராடிய மாணவர்களை புல்டோசர்களை மேலேற்றிக் கொன்றதுபோல, அனைத்து மாவோயிஸ்டுகளையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டிருந்தது. என்ன ஒரு தேசபக்தி!


அப்படியானால், மக்களுக்கு இடையூறு தரும் முறையில், அரசுக்கெதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தும் பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், போகுவரத்துத் தொழிலாளர்கள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாணவர்கள் என அனைவருக்கும் இம்முறையிலேயே தண்டனை கொடுத்து விடலாமா?


அந்த லிஸ்டில் பாபர் மசூதியை இடிக்க வைத்து, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர்6ஆம் தேதியை ஒட்டி, பாதுகாப்பு எனும் பெயரில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கிய அத்வானியும், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கொல்வதற்குக் கூட கூலிப்படை அனுப்பிய மாண்புமிகு நரேந்திர மோடியும் முதன்மையாக நிற்பார்களே! சம்மதம் தானா?!



கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து என எழுதும் போதுதான் "உன்னைப் போல் ஒருவன்" கமலின் நினைவு வருகிறது. குஜராத் கலவரம் குறித்து உருகி, அழுது புரண்டு நடித்து, காசு அழுது படம் பார்த்த எங்களையும் அழ வைத்தீர்களே, ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாமென நீங்களே உங்கள் நண்பர், திரு. அமிதாப் அவர்களை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வேண்டிக்கொள்ளலாமே?


தெனாலியில் இலங்கைப் படையின் குண்டுவீச்சில் உயிரிழந்த தாயைப் பற்றி, ஒரே மூச்சில் பேசிக் கைதட்டல் வாங்கிய உங்களால் அங்கு நடந்து வரும் மனித உரிமை மீறலை உணர்த்திட முடியாதா என்ன? தனது தசாவதாரத்துக்காக ஜாக்கிசானை வரவழைத்து சிரிக்க வைத்த நீங்கள், கேவலம், மனிதர்களாய்ப் பிறந்துவிட்ட ஈழ மக்களுக்காக, இந்தித் திரையுலகை தடுத்திட முடியாதா என்ன?


அதுசரி, இம்முறை இந்தித் திரையுலகைத் தடுப்பதன்மூலம், கஜினி முகமது போல ஈழப் பகுதிகளின் மீது படையெடுக்கும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வர்த்தக பெருநிறுவனங்களைத் தடுத்திடவா முடியும்? இதுபோன்ற எல்லை கடந்த தீவிரவாதம், தன்னாட்டு மக்களின் மீதே திணிக்கப்படுவது தானே மாவோயிஸ்டுகளையும், நக்சலைட்டுகளையும், விடுதலைப்புலிகளையும் உருவெடுக்கச் செய்கிறது?



காடுகளை அழித்ததால்தானே இப்போது யானைகளும், சிறுத்தைப்புலிகளும் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன? பழங்குடி மக்களை, அவர்தம் வாழ்விடங்களை விட்டு விரட்டி விட்டு, தொழிலதிபர்களுக்கு அந்த நிலங்களைப் பட்டா போட்டுத் தருவது தீவிரவாதமா? மிதவாதமா? ஜனநாயகத்தைத் தோற்கடித்து வெற்றிபெற்ற உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தொழிலதிபர்களின் முந்தானைக்குள் ஒழிந்துகொண்டு, மாவோயிஸ்டுகளை ஒழிப்போமென ஊளையிடுகிறார்! வாழ்க ஜனநாயகம்!



வரவிருக்கும் தேர்தலுக்குள் குடும்பத்திற்குள் மீண்டும் வெளிப்படையான பிளவு ஏற்படக்கூடாதென தன்னையும் பேராசிரியரையும் தவிர வேறு யாரும் பத்திரிக்கைகளுக்கு எந்த பேட்டியும் தரக்கூடாதென கலைஞர் கட்டளையிட்டார். புதிதாகச் சேர்ந்த குஷ்புவோ விஜயகாந்தைப் பற்றி காட்டமாகப் பத்திரிக்கை பேட்டி கொடுத்து பொளந்து கட்டுகிறார்! ஒருவேளை யாராவது இதுபற்றி கேட்டால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேட்டி கொடுப்பதில் தவறில்லை, ஆனால் 'பாதுகாப்பான முறை'யில் பேட்டி தரவேண்டுமெனச் சொன்னாலும் சொல்லுவார்!



குஷ்பு வந்தாலும் வந்தார், தேர்தல் கூட்டணி குறித்த அலம்பல்களை, மன்னிக்கவும், அலசல்களை அதிக விற்பனைப் பத்திரிக்கைகள் தொடங்கி விட்டன! 'திருதிரு'வளவன் திமுக கூட்டணியில் நீடிப்பாரா? அதிமுகவுக்குத் திரும்புவாரா? 'பல்டி புகழ்' பாமக திமுக பக்கமா? அதிமுக பக்கமா? எனப் பக்கம் பக்கமாக அனல் பறக்கும் கட்டுரைகள்! மக்களுக்கோ, புள்ளைக்கு பொறியியல் படிப்புக்கு எவ்வளவு அழணுமோ? மருத்துவப் படிப்புக்கு படிப்புக்கு எவ்வளவு அழணுமோ? என்ற ஜனநாயகக் குழப்பம்! வாழ்க குடியரசு!