கோவை செம்மொழி மாநாட்டிலே சாலமன் பாப்பையா தலைமையிலே பட்டிமன்றம் ஒன்று நடந்தது. அதிலே பத்திரிக்கைத்துறை சார்பாக நக்கீரன் கோபால் பேசினார். அவரைப் பார்த்தமாத்திரத்தில், பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் தனது பத்திரிக்கையின் விற்பனைக்காக பிரபாகரனின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கீழ்த்தரமான மோசடிச்செயல்தான் நினைவுக்கு வந்தது.
தன் மரணச் செய்தியையே, தொலைக்காட்சியில் கண்டு பிரபாகரன் நகைப்பது போன்ற கிராபிக்ஸ் படத்தை வெளியிட்டு, அதன்மூலம் தனது பத்திரிக்கையின் விற்பனையை அதிரடியாக அதிகரித்துக்கொண்டார். பத்திரிக்கை வெளியான சிலமணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தீவிர ஆதரவாளர்கள்கூட நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான படத்தை உண்மையென்று கருத்து வெளியிடவில்லை. அந்தப் படம் எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்ற தகவலும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.
பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் இதுபோல பல்வேறு பத்திரிக்கைகளும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் தைரியமாக செயல்பட்டு வருகின்றன. இலவச இணைப்பு என்ற பெயரில் முன்னணிச் செய்தித்தாள்கள் பத்திரிக்கை இணைப்புகளை வழங்குவது வழக்கத்தில் உள்ளது. பெயரல்ளவில்தான் இலவச இணைப்பு. ஆனால் அந்த இணைப்பு வரும் நாட்களில் மட்டும் செய்தித்தாளின் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்கூடு. இதுகுறித்து எனது கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கேள்வி எழுப்பினேன். இந்த நடைமுறை, சட்டத்திற்குப் புறம்பானதுதான் என்று அப்போது பதிலளித்தார்கள்.
பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவதில் இருக்கும் ஒளிவுமறைவுகளைப் பார்க்கும்போதுதான் பத்திரிக்கை அதிபர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்குமான வித்தியாசத்தை உணர முடியும். தனக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடுடைய கட்சிகளின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, மற்ற கட்சிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, திரித்துக் கூறுவது என பல்வேறுவிதமான குறுக்குப் புத்திகளை கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளுமே செயல்படுத்தி வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இணையதள செய்திப் பத்திரிக்கையான தட்ஸ்தமிழ்.காமைச் சொல்லலாம். ஜெயலலிதா குறித்த செய்திகளை வெளியிடும்போது "கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்" என்றுதான் நக்கலுடன் ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுவார்கள். மற்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த முறையை கடைபிடிப்பதில்லை.
பத்திரிக்கைச் சுதந்திரத்தின் அடுத்த மோசடியாக விளம்பரங்களை வெளியிடுவதில் வரம்பு மீறுவதைச் சொல்லலாம். தங்களது பத்திரிக்கையில் மது, புகைபிடித்தல் தொடர்பான பொருட்களின் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என மார்தட்டிக் கொள்ளும் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் தற்போது விளம்பரங்களுக்கிடையேதான் அங்கங்கே ஒன்றிரண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இவ்வார ஆனந்தவிகடன் பத்திரிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டால், முதல் ஏழு பக்கங்களில் முழுக்க முழுக்க விளம்பரங்களே இடம்பிடித்திருக்கின்றன! விளம்பரங்கள் வெளியிடும்விதத்தில் முன்னணிப் பத்திரிக்கைகள் செய்துவரும் இன்னொருவகை மோசடி சற்று சுவாரஸ்யமானது. பல்வலிக்கான காரணங்களை விளக்கி கட்டுரை ஒன்றை வெளியிட்டு, கட்டுரை முடிவில் "இத்தகைய பல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் எங்கள் மருத்துவமனையில் சிறந்த முறையில் குணப்படுத்துவோமென மருத்துவர் தெரிவிக்கிறார்" எனக்கூறி விளம்பரம் செய்திருப்பார்கள்!
விளம்பர ஆதரவில்லாமல், முழுக்கமுழுக்கச் செய்திகளை மட்டுமே வெளியிடும் பத்திரிக்கைகளில் தனிச்சுற்றுச் சிற்றிதழ்கள் தவிர, "புதிய ஜனநாயகம்", "புதிய கலாச்சாரம்" பத்திரிக்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பத்திரிக்கைச் சுதந்திரத்தின் மற்றொரு மோசடியாக, சாமியார்களைக் கொண்டு எழுதப்பட்டுவரும் ஆன்மீகத் தொடர், மற்றும் போலி மருத்துவர்களைக் கொண்டு எழுதப்படும் மருத்துவத் தொடர்களைக் குறிப்பிடலாம். நேற்றுவரை நித்தியானத்தாவிற்காக கதவைத் திறந்து வைத்த குமுதம் பத்திரிக்கை, சிக்கலில் அவர் சிக்கியதுமே தலைகீழாக மாறி, அவருக்கு அரைகுறை எதிர்ப்பு தெரிவித்து, சிஷ்யப்பிள்ளையான சாருநிவேதிதாவை வைத்தே தொடர் எழுத வைத்து காசு பார்க்கும் உத்தியை மாற்றியமைத்துக்கொண்டது, கேவலமான மோசடியாகும். குமுதத்திற்கும் நித்தியானந்தாவிற்குமான உறவை விசாரித்தாலே பல உண்மைகளை அம்பலப்படுத்தலாம்!
ஆளுங்கட்சியினரால் பத்திரிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது பத்திரிக்கையாளர் மன்றம் நேரடியாக வீதிக்கே வந்து போராடியதை பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் முன்னணிப் பத்திரிக்கைகளை யார் கட்டுப்படுத்துவது? கட்டுப்படுத்தும் பொறுப்பு பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இல்லையா? பத்திரிக்கையாளர்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லையா? பத்திரிக்கைகள் நாட்டின் ஒன்றாவது தூண், ரெண்டாவது தூண் என்று என்னத்தையாவது கப்ஸா விட்டுப் பீற்றிக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? அல்லது அதுதான் பத்திரிக்கை சுதந்திரமா?!
Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts
Monday, July 5, 2010
Monday, March 29, 2010
கசக்கும் மருந்துகள் - ஓர் எச்சரிக்கை!
ஒரு நகைச்சுவை:
"அந்த மருந்துக்கடைக்குள்ள தொல்பொருள்த்துறையினர் ஆராய்ச்சி பண்றாங்களாமே?"
"ஆமா, அங்க 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்து மாத்திரையெல்லாம் கண்டெடுத்தாங்களாம்!"
இனி விஷயத்திற்கு வருவோம்!
சிறிய தலைவலிக்கும், பல்வலிக்கும் மருத்துவமனை சென்று டோக்கன் பெற்று, காத்திருந்து, மருத்துவருக்குக் கட்டணம் செலுத்திய பின்பு மருந்து மத்திரை வாங்கப் பொருளாதார வசதியும் வருமானமும் இல்லாத மக்கள் கூட்டம் பெருகிவரும் இன்றைய சூழலில், மருந்துக்கடைகளின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உணர்ந்த மருந்து விற்பனையாளர்கள் கூட்டமோ, மக்களின் இயலாமையையும், அறியாமையையும் வெகுசுலபமாக காசாக்கி வருகிறது!
அண்மையில் குப்பையில் கொட்டப்பட்ட பயன்பாட்டு(Expiry Date) நாள் முடிந்த மருந்து மாத்திரைகளைக் கைப்பற்றி மீண்டும் பயன்பாட்டு நாளைப் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டுவரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து நாம் அறிந்த, அறியாத உண்மைகளைப் பற்றி விவரங்கள் சேகரித்ததில் மருந்து விற்பனையாளர் கூட்டத்தின் சங்கிலித்தொடர் ஏமாற்று வேலைகளை அறிய முடிந்தது.
நான் மேலும் குப்பையைக் கிளறியதில் கிடைத்த சில தகவல்களை இங்கு வரிசைப்படுத்துகிறேன்.
முதலாவதாக, ஒரு மருந்துக்கடை தொடங்க வேண்டுமென்றாலே அதற்கான விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடித்து கடை நடத்த வேண்டும். உதாரணம்: கடை முழுவதும் குளிர்சாதன வசதி செய்திருக்க வேண்டும். ஆனால் இதனை ஆய்வு செய்யும் மருந்து ஆய்வாளரோ(Drug Inspector) ஆய்வு செய்யாமலேயே கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து விடுகிறார். ஏதோ ஓர் இணைய மையத்திலிருந்து குடியரசுத் தலைவருக்கு மொட்டையாக ஈமெயில் மிரட்டல் வந்த காரணத்தால், இன்று இணைய மையங்கள் அனைத்திலும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் அன்றாட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையில் எவ்வளவு மெத்தனப்போக்கு!
சென்னையில் மட்டும் 4000ற்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் உள்ளன. இவற்றில் 300லிருந்து 400 கடைகள் மட்டுமே மருந்தாளுநர் பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுகிறன. மற்ற கடைகள் அனைத்திலும், ராமாயணக் கதையில், ராமனின் காலணியை வைத்து பரதன் நாடாண்டதுபோல, மருந்தாளுனரின் வெறும் கையெழுத்தை மட்டுமே வைத்து, மக்களின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகின்றது!
மருந்தாளுனருக்குக்கூட மாதச்சம்பளம் கொடுக்க இயலாத பரிதாப நிலையிலா இத்தனை மருந்துக்கடைகள் நடத்தப்படுகின்றன? இல்லவே இல்லை! விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுமே 50% முதல் 1000%ற்கும் மேலான லாபம் வைத்தே விற்பனைக்கு வருகின்றன. உதாரணமாக, அதிகமாக விற்பனையாகும் செட்ரிசைன்(CETRIZINE) என்ற மாத்திரையின் தயாரிப்புச் செலவு 10 பைசாவிற்கும் குறைவே. அது அடுத்தகட்டமாக, ஸ்டாக்கிஸ்டுகளால்(பதுக்கல்காரர்கள் என்றும் அன்புடன் அழைக்கலாம்!) வாங்கப்பட்டு, 30 பைசாவிற்கு சில்லரை விற்பனையாளர்களிடம் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையாளர்களோ இவற்றை 3 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார்கள். லாப சதவிகிதத்தை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்!
இப்படி ஸ்டாக்கிஸ்டுகளிடம் வாங்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் பயன்பாட்டு நாள் நிறைவடைந்தால் ஸ்டாக்கிஸ்டுகளிடமே திருப்பித் தரப்படும். அவற்றை தண்ணீரில் கரைத்தோ, தீயிட்டோ அழிப்பதுதான் மருந்து விற்பனை விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை ஏமாற்றித்தான் தில்லுமுல்லுகள் இங்கே நடக்கின்றன.
காலாவதியான மருந்துகளை உரிய நிறுவனங்களிடம் ஸ்டாக்கிஸ்டுகள் ஒப்படைத்தால் மிகக் குறைவான தொகைதான் திரும்பக் கிடைக்கும். இதைத் தவிர்க்க இந்த ஸ்டாகிஸ்டுகள், காலாவதியான மருந்துகளின் பயன்பாட்டுத் தேதியை மாற்றியமைத்து மறுவிற்பனைக்கு அனுப்புகிறார்கள். இதற்கு மருந்து ஆய்வாளர்களும் உடந்தை. மாதாமாதம் மருந்துகளின் இருப்பு குறித்து விவரத்தை ஆராய்ந்து கணக்கெடுப்பது மருந்து ஆய்வாளர்களின் கடமை. ஒருசில பெண் ஆய்வாளர்கள் தவிர எந்த மருந்தாய்வாளர்களும் மருந்துக்குக் கூட இத்தகு சோதனையில் ஈடுபடுவதில்லை என்பது தெரியவருகிறது!
அடுத்ததாக, பயன்பாட்டுத்தேதியை மாற்றியமைப்பதற்கு தயங்கும் சில ஸ்டாக்கிஸ்டுகள், புத்திசாலித்தனமாக பயன்பாட்டுத்தேதி பதியப்பட்டிருக்கும் மருந்துப் பகுதியை மட்டும் துண்டித்துவிட்டு மீதிப் பகுதியை மருந்துக்கடைக்கு திரும்பவும் வழங்குகிறார்கள். இதற்கு மருந்துக்கடை உரிமையாளர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.
மருந்து விற்பனைப் பிரதிகள் தங்கள் தயாரிப்புகளைத் தள்ளி(!) விடுவதற்குப் பயன்படுத்தும் உத்திகள் அனைவரும் அறிந்ததே. தங்களது தயாரிப்புகளை வாங்கும் மருத்துவர்கள், மருந்துக்கடை உரிமையாளர்களை பரிசுப்பொருட்களின் மழையில் நனைய வைப்பதே இவர்களின் தலையாய கடமை! அரசாங்கத்தின் இலவசத் தொலைக்காட்சிகள் வழங்கும் திட்டத்தின் முன்னோடிகள் என்றும் இவர்களைச் சொல்லலாம்! ஆம், பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் வேடிக்கை பார்க்கும் தொலைக்காட்சிகள் முதலாக பல்வேறு பொருட்களும் இவர்கள் தந்த அன்பளிப்புதான்! அதுமட்டுமின்றி,நான்கு மருந்துக் குப்பிகள் வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையிலும் பல்வேறுவிதமாக விற்பனை நடைபெறுகிறது. இப்படித் திணிக்கப்படும் மருந்துகளில் நோயாளிகள் எவ்விதம் தரத்தை எதிர்பார்க்க முடியும்?
இவையனைத்துமே மேலோட்டமான எனது விசாரிப்பினால் அறிந்துகொண்ட சில உண்மைகளே! மேலும் தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள், இத்தகவலைப் பரவ விடுங்கள்! பிரதமருக்கு அனுப்பபடும் "ஏனோதானோ" தந்திகள் போலல்லாமல், உயிரோடிருப்பவர்கள் செத்ததாகப் பரவும் வதந்தி போல வேகமாக பரவட்டும்! உயிரோடிருக்கும் நாமெல்லாம் பிழைத்திருக்க, விழித்திருக்க உதவட்டும்!
Subscribe to:
Posts (Atom)



