Monday, July 5, 2010

பத்திரிக்கைச் சுதந்திரம்னா என்னங்க?

கோவை செம்மொழி மாநாட்டிலே சாலமன் பாப்பையா தலைமையிலே பட்டிமன்றம் ஒன்று நடந்தது. அதிலே பத்திரிக்கைத்துறை சார்பாக நக்கீரன் கோபால் பேசினார். அவரைப் பார்த்தமாத்திரத்தில், பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் தனது பத்திரிக்கையின் விற்பனைக்காக பிரபாகரனின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கீழ்த்தரமான மோசடிச்செயல்தான் நினைவுக்கு வந்தது.


தன் மரணச் செய்தியையே, தொலைக்காட்சியில் கண்டு பிரபாகரன் நகைப்பது போன்ற கிராபிக்ஸ் படத்தை வெளியிட்டு, அதன்மூலம் தனது பத்திரிக்கையின் விற்பனையை அதிரடியாக அதிகரித்துக்கொண்டார். பத்திரிக்கை வெளியான சிலமணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தீவிர ஆதரவாளர்கள்கூட நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான படத்தை உண்மையென்று கருத்து வெளியிடவில்லை. அந்தப் படம் எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்ற தகவலும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.


பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் இதுபோல பல்வேறு பத்திரிக்கைகளும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் தைரியமாக செயல்பட்டு வருகின்றன. இலவச இணைப்பு என்ற பெயரில் முன்னணிச் செய்தித்தாள்கள் பத்திரிக்கை இணைப்புகளை வழங்குவது வழக்கத்தில் உள்ளது. பெயரல்ளவில்தான் இலவச இணைப்பு. ஆனால் அந்த இணைப்பு வரும் நாட்களில் மட்டும் செய்தித்தாளின் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்கூடு. இதுகுறித்து எனது கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கேள்வி எழுப்பினேன். இந்த நடைமுறை, சட்டத்திற்குப் புறம்பானதுதான் என்று அப்போது பதிலளித்தார்கள்.


பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவதில் இருக்கும் ஒளிவுமறைவுகளைப் பார்க்கும்போதுதான் பத்திரிக்கை அதிபர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்குமான வித்தியாசத்தை உணர முடியும். தனக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடுடைய கட்சிகளின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, மற்ற கட்சிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, திரித்துக் கூறுவது என பல்வேறுவிதமான குறுக்குப் புத்திகளை கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளுமே செயல்படுத்தி வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இணையதள செய்திப் பத்திரிக்கையான தட்ஸ்தமிழ்.காமைச் சொல்லலாம். ஜெயலலிதா குறித்த செய்திகளை வெளியிடும்போது "கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்" என்றுதான் நக்கலுடன் ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுவார்கள். மற்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த முறையை கடைபிடிப்பதில்லை.




பத்திரிக்கைச் சுதந்திரத்தின் அடுத்த மோசடியாக விளம்பரங்களை வெளியிடுவதில் வரம்பு மீறுவதைச் சொல்லலாம். தங்களது பத்திரிக்கையில் மது, புகைபிடித்தல் தொடர்பான பொருட்களின் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என மார்தட்டிக் கொள்ளும் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் தற்போது விளம்பரங்களுக்கிடையேதான் அங்கங்கே ஒன்றிரண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இவ்வார ஆனந்தவிகடன் பத்திரிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டால், முதல் ஏழு பக்கங்களில் முழுக்க முழுக்க விளம்பரங்களே இடம்பிடித்திருக்கின்றன! விளம்பரங்கள் வெளியிடும்விதத்தில் முன்னணிப் பத்திரிக்கைகள் செய்துவரும் இன்னொருவகை மோசடி சற்று சுவாரஸ்யமானது. பல்வலிக்கான காரணங்களை விளக்கி கட்டுரை ஒன்றை வெளியிட்டு, கட்டுரை முடிவில் "இத்தகைய பல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் எங்கள் மருத்துவமனையில் சிறந்த முறையில் குணப்படுத்துவோமென மருத்துவர் தெரிவிக்கிறார்" எனக்கூறி விளம்பரம் செய்திருப்பார்கள்!
விளம்பர ஆதரவில்லாமல், முழுக்கமுழுக்கச் செய்திகளை மட்டுமே வெளியிடும் பத்திரிக்கைகளில் தனிச்சுற்றுச் சிற்றிதழ்கள் தவிர, "புதிய ஜனநாயகம்", "புதிய கலாச்சாரம்" பத்திரிக்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


பத்திரிக்கைச் சுதந்திரத்தின் மற்றொரு மோசடியாக, சாமியார்களைக் கொண்டு எழுதப்பட்டுவரும் ஆன்மீகத் தொடர், மற்றும் போலி மருத்துவர்களைக் கொண்டு எழுதப்படும் மருத்துவத் தொடர்களைக் குறிப்பிடலாம். நேற்றுவரை நித்தியானத்தாவிற்காக கதவைத் திறந்து வைத்த குமுதம் பத்திரிக்கை, சிக்கலில் அவர் சிக்கியதுமே தலைகீழாக மாறி, அவருக்கு அரைகுறை எதிர்ப்பு தெரிவித்து, சிஷ்யப்பிள்ளையான சாருநிவேதிதாவை வைத்தே தொடர் எழுத வைத்து காசு பார்க்கும் உத்தியை மாற்றியமைத்துக்கொண்டது, கேவலமான மோசடியாகும். குமுதத்திற்கும் நித்தியானந்தாவிற்குமான உறவை விசாரித்தாலே பல உண்மைகளை அம்பலப்படுத்தலாம்!

ஆளுங்கட்சியினரால் பத்திரிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது பத்திரிக்கையாளர் மன்றம் நேரடியாக வீதிக்கே வந்து போராடியதை பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் முன்னணிப் பத்திரிக்கைகளை யார் கட்டுப்படுத்துவது? கட்டுப்படுத்தும் பொறுப்பு பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இல்லையா? பத்திரிக்கையாளர்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லையா? பத்திரிக்கைகள் நாட்டின் ஒன்றாவது தூண், ரெண்டாவது தூண் என்று என்னத்தையாவது கப்ஸா விட்டுப் பீற்றிக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? அல்லது அதுதான் பத்திரிக்கை சுதந்திரமா?!

No comments:

Post a Comment