Wednesday, March 3, 2010

பத்திரிக்கையால் வாழ்ந்து கெட்ட நித்தியானந்தம்!

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!" எனும் பழமொழி, நித்தியானந்தாக்களால் ஊடகங்கள் பெரும் வளர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும் மிகவும் பொருந்தும்!

"யாரிந்த நித்தியானந்தா?"

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!"

"குமுதம் புக்ல பார்த்திருக்கேன்!"

"குமுதம் புக்ல சூப்பரா ஒரு ஆன்மீகத்தொடர் எழுதிட்டு இருக்காரே!"

என்ற உரையாடல்கள் வாயிலாக, குமுதம் பத்திரிக்கையால் வெகுஜன மன்றத்தில் அறிமுகமாகி, தற்போது 33 நாடுகளில் 1500 கிளைகளுடன் (அவரது அடிப்பொடிகள் கணக்கு!) ஆழமாக வேரூன்றியுள்ள நித்தியானந்தனின் வளர்ச்சி புரியும்! இடையில், கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக இவனைப் பற்றி புகார் வந்தபோதும், நித்தியானந்தன் என்ற தனிமனிதனை ஊக்குவிக்கும் செயலை குமுதம் நிறுத்தவில்லை. சொல்லப்போனால், தற்போது நித்தியானந்தனின் ஆசிரமத்தை நோக்கி விழும் கற்கள், திசை மாறிய கற்களே!

"நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது, கொஞ்சம் நாமளும்தான் மாறிக்கிட்டா அதுல தப்பேது?!", எனும் திரையிசைப் பாடலுக்கேற்ப, காலங்காலமாக பேயோட்டியும், குறி சொல்லியும், அருளாசி கொடுத்தும், மந்திர தந்திரங்கள் செய்தும், பிழைப்பு நடத்திய சாமியார்கள், காலத்திற்கேற்ப தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளத் தொடங்கி வருகிறார்கள்.

இதன் பலனாக சொற்பொழிவாற்றும் திறன் படைத்த பலரும், தங்களது திரு(!)நாமத்திற்கு முன்னும் பின்னும் சில எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு கடவுளின் அவதாரமாகக் களமிறங்கத் தொடங்குகிறார்கள். இவர்களில் சிலர், உலக அமைதிக்காக பிரார்த்திப்பதும், மன அமைதிக்காக யோகாவை பயிற்றுவிப்பதுமாக தங்களை சமூகச்சிந்தனை கொண்ட சாமியாராகக் காட்ட முயற்சித்து வருகிறார்கள்! நித்தியானந்தன், ரவிஷங்கர், கல்கி பகவான், சிவசங்கர பாபா போன்ற குப்பைகள் அனைத்துமே இந்த ரகம்தான்.

மக்கள் மத்தியில் அறிமுகமாகும் முதல் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இவர்கள் தரும் பத்திரிக்கை விளம்பரங்கள், பேனர், சுவரொட்டி விளம்பரங்கள், கூட்டத்திற்கு ஆட்களை கூட்டி வருவது என அனைத்திலும் அக்மார்க் அரசியல்வாதிகளை மிஞ்சி விடுகிறார்கள். இப்படியே ஒருவழியாக, பணக்கார பக்தர்கள், சிலரை தன்வசப்படுத்தி பணங்கறந்து, ஆங்காங்கே ஆசிரமத்தின்பெயரால் நிலங்களை வாங்கிக் குவித்து, அரசியல்வாதிகள் சிலரையும் தன் கைக்குள் போட்டு, தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறார்கள்.

பிறகென்ன, போலி செக்ஸ் டாக்டர்கள் பாணியில், விஜயம் செய்வதும், தரிசனம் தருவதுமாக ஒரே அமர்க்களம்தான் போங்கள்! அபரிமித வளர்ச்சிக்குப் பிறகு, சுனாமி நிதி வழங்குவதும், வீடு கட்டிக் கொடுப்பதும், மருத்துவமனை திறப்பதுமாக இந்த கேடிக் கும்பலின் சமுதாயச் சிந்தனை, படித்த வர்க்கத்தையும்கூட வியக்க வைக்கிறது!

"எவன் அப்பன் வீட்டுச் சொத்தை இவனுங்க இப்படி குடுக்குறாங்க?, இவனுங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது?, முற்றும் துறந்த சாமியாருக்கு எதுக்கு இத்தனை சொத்து, ஆடம்பர பங்களா, ஏசி வாகனம்?, சாமியார்களிடம் அப்படி என்னதான் நம்மை விட பெரிய சக்தி இருக்குது?, சமுதாய சேவை என்னும் பெயரில் இயக்கம் தொடங்கி, அதற்காக பணத்தை திரட்டும் முயற்சி, உண்மையில் எதற்காக?", இப்படி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் சாமியார்களின் பின்னால் செல்லும் சமுதாயத்தின் போக்கு, அபாயகரமானது. "காக்கா உட்கார, பனம்பழம் விழுந்த" சொல்வாக்கு சாமியார்கள்தான் இங்கு உண்டென்பதை அனைவரும் உணர வேண்டும்!

"வெள்ளத்தனைய மலர்நீட்டம்" போல, இந்த சாமியார்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துவரும் ஊடகங்களின் மீதும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆளுக்கு ஒரு சாமியாரைத் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து சில, பல லகரங்களை சன்மானமாகப் பெற்றுக் கொண்டு, கண்மூடித்தனமாக, அவர்களை ஆன்மீகத்தொடர் எழுதச் செய்வது கண்டனத்துக்குரியது. இன்றுவரை குமுதத்தில் ஆன்மீகத்தொடர் எழுதிய நித்தியானந்தன், நாளையே அப்ரூவராக மாறி, நக்கீரனில் "அஜால்குஜால்" தொடர் எழுதினாலும் ஆச்சர்யப்படுவதில்லை!

அம்பலப்படுத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், படுக்கையறைக் காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி, தனது சமுதாயப் பொறுப்புணர்வைக் காட்டும் தொலைக்காட்சி, இலங்கைத் தமிழர் படுகொலைகளை, அரசுக்கு எதிரான போராட்டங்களை மட்டும் இருட்டடிப்பு செய்தது ஏன்? மூட நம்பிக்கையைப் பரப்பும் தொடர்களை ஒருபக்கம் ஒளிபரப்பிவிட்டு, மறுபக்கம் ஏன் இந்த சமுதாயப் பொறுப்புணர்வு வேடம்? சிந்திப்போம்... சிந்திப்போம்... ஆன்மீக மோசடிப் பேர்வழிகளைப் புறந்தள்ளுவோம்!

No comments:

Post a Comment